ADDED : டிச 31, 2011 12:02 AM
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உத்தமதானபுரத்தில் பூட்டியே கிடக்கும் உ.வே.சா., நினைவு இல்லத்தை திறக்க கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தில் பிறந்த உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த வீட்டை தமிழக அரசு இருபத்து மூன்று லட்சம் ரூபாய் செலவில் நினைவு இல்லம் கட்டப்பட்டு கடந்த 2008 ஆண்டு தமிழ்தாத்தா உ.வே.சா., நினைவு இல்லம் திறக்கப்பட்டது.
இதில், தரை தளத்தில் நினைவு இல்லமும், முதல் தளத்தில் கிராம நூலகமும் இயங்கிவந்தது.
தற்போது நூலகம் மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த 6 மாத காலத்திற்கும் மேலாக தரை தளத்தில் இயங்கிவந்த உ.வே.சா., நினைவு இல்லம் பொறுப்பாளர்கள் எவரும் இல்லாததால் பூட்டி கிடக்கிறது. நாள்தோறும் நீண்ட தூரத்திலிருந்து வரும் தமிழ் ஆர்வலர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் உ.வே.சா., நினைவு இல்லத்தில் உள்ள ஓலைச்சுவடிகளையும், அவரது சிலையையும் காணமுடியாமல் பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
எனவே, கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து உ.வே.சா., நினைவு இல்லத்திற்கு பொறுப்பாளர் ஒருவரை நியமித்து உ.வே.சா., நினைவு இல்லத்தை திறந்து வைக்க வேண்டு ம் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
