மாணவர்களிடம் மத பிரசாரம்27 பேர் போலீசில் ஒப்படைப்பு
மாணவர்களிடம் மத பிரசாரம்27 பேர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : பிப் 23, 2025 01:20 AM
தஞ்சாவூர்,:பேராவூரணி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், மத பிரசாரம் செய்தவர்களை, பா.ஜ.,வினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு, மதுக்கூர், கரூர் பகுதியில் இருந்து கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 40 பேர், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் மடத்திக்காடு பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்க சென்ற போது, கிராம மக்கள் அவர்களிடம் பிரச்னை செய்ததால், மத பிரசார கும்பல் திரும்பினர்.
தொடர்ந்து மாலையில், களத்துார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி முன் நின்று, பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ - மாணவியரிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். ஹிந்து மத கடவுள்களை பற்றி தரக்குறைவாக பேசி, மூளைச் சலவை செய்ய முயன்றனர்.
இது குறித்து அறிந்த களத்துார் பகுதி கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர், பா.ஜ.,வினர் மத பிரசாரம் செய்தவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கு தகவல் அளிப்பதாக கூறியதால், 13 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, 27 பேரை பிடித்து, திருச்சிற்றம்பலம் போலீசில் ஒப்படைத்தனர்.
