ADDED : ஏப் 30, 2024 11:07 PM
தஞ்சாவூர்:கர்நாடக மாநிலம், கேமதாதுவில், காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு, பிப்., 1ம் தேதி நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் தீர்மானம் கொண்டு வந்த போது, தமிழக அதிகாரிகள் அதை எதிர்த்து வாக்களித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.
இருப்பினும், சட்ட வழிமுறைகளை மீறி, காவிரி ஆணையம் மேகதாது அணை கட்டுமானம் குறித்து தீர்மானத்தை கூட்டத்தில் வைத்தது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு நடந்து வருகிறது.
இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் இருவரும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என, உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு உரிய அளவு நீர் பங்கீடு கிடைக்கும். இது புரியாமல் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை தமிழக அமைச்சர்களிடம் விளக்க தயாராக உள்ளோம் என, கூறியுள்ளனர். இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன் கூறியதாவது:
பிப்., 1ம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் சட்ட விரோதமாக மத்திய அரசு பிரதிநிதிகள் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்நிறைவேற்ற கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இது சட்டவிரோத செயலாகும். உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி, மே 2ம் தேதி தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள்சங்க பொதுச்செயலர் மாசிலாமணி கூறியதாவது:
மேகதாதுவில் அணை கட்ட தமிழக விவசாயிகள் விட மாட்டோம். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பேசுவது முறையற்றது.
காவிரி பிரச்சனைக்கு காவிரி நடுவர் மன்றம் அமைப்பதே தீர்வு. கர்நாடகாவில் பா.ஜ., -- காங்., உள்ளிட்ட கட்சிகள் கபட நாடகம் நடத்தி வருகின்றன.
இதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம், மேகதாது அணைக்கு எதிராக சாலை மற்றும் ரயில் மறியல்போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுபோன்று போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.