/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கடல் பசுவை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு
/
கடல் பசுவை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 28, 2024 09:08 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் மனோராவை மையமாக கொண்டு, தமிழக அரசு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, மீனவர்களுக்கு கடல்பசு பாதுகாப்பு குறித்து வனத்துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கடல் பசு தினத்தில், கடல் பசுவை பாதுகாக்கும் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கடல்பசு தினத்தை முன்னிட்டு, புதுப்பட்டினம் கடற்கரையில் 30 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட கடல் பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழுவினர், உருவாக்கினர். தொடர்ந்து, அந்த சிற்பத்தின் முன் நின்று, 'கடல் பசுவை பாதுகாப்போம்' என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, வெளிவயல் கிராமத்தில், வனத்துறை மற்றும் ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனம் சார்பில், கடல் பசு, ஆமைகள் வலையில் சிக்கிய நிலையில், மீட்டு கடலில் விட்ட மீனவர்கள் ஒன்பது பேருக்கு வனத்துறை சார்பில், ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி பேசியதாவது:
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அருகி வரும் ஒரு அரிய கடல்வாழ் பாலுாட்டி உயிரினமாக கடற் பசு உள்ளது. அவற்றின் வாழ்விடமான கடல் தாழைகளும் அழிக்கப்படுகின்றன. கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடல் பசு. கடல் பசு பாதுகாக்கப்பட்டால் கடல் வளம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் காப்பாற்றப்படும்.
தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில், நடப்பாண்டில் மூன்று கடல் பசு மற்றும் 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு மீனவர்களால் கடலில் விட்டுள்ளனர். கடல்பசு குறித்து மீனவர்கள் மத்தியில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
விழாவில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், ஓம்கார் பவுண்டேஷன் அமைப்பின் இயக்குனர் பாலாஜி, இந்திய வனவிலங்கு நிறுவன ஆராய்ச்சியாளர் சுவேதா, நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.