ADDED : மே 03, 2024 02:45 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், தமிழ் பல்கலைகழகம் 1981ல் துவங்கப்பட்டது. இங்கு பணியாற்றியவர்கள், 1996ல் இருந்து ஓய்வுபெறுகின்றனர். இதுவரை, 80 பேராசிரியர்கள், 159 ஆசிரியரல்லாத அலுவலர்கள் என மொத்தம், 239 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் ஊதியம், இதர செலவு, வளாக பராமரிப்புக்காக, 2019ம் ஆண்டில், 26.91 கோடி ரூபாய் இருந்தது. இந்த தொகையில் இருந்து தான் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், முறையான அரசாணை இல்லை என கூறி, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. ஓய்வூதியம், வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் செயல்பாடுகளை கண்டித்து, ஓய்வுபெற்ற அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நேற்று வளாகத்தில் போராட்டம் நடந்தது.
இது குறித்து சுந்தரலிங்கம் கூறியதாவது:
ஓய்வூதியத் தொகை வராததால், மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கோ, மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கோ பணம் இல்லாமல் தவிக்கிறோம். குடும்ப ஓய்வூதியத்தை முழுமையாக நம்பி வாழும் விதவைப் பெண்களும், அவர்களது பிள்ளைகளும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.