/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'மேகதாதுவில் அணை கட்ட துணைபோகும் தமிழக அரசு'
/
'மேகதாதுவில் அணை கட்ட துணைபோகும் தமிழக அரசு'
ADDED : மே 03, 2024 02:12 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று, காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில், ஊர்வலம் நடந்தது.
'கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட அந்த மாநில அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்' என விவசாயிகள் அப்போது வலியுறுத்தினர்.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், அய்யாக்கண்ணு தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு, காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு பின், நிருபர்களிடம் பாண்டியன் கூறியதாவது:
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில், மேகதாதுவில் அணை கட்ட இருப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.
கடந்த பிப்., 1ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரியது. அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எந்த நேரமும் மோடி அரசு, அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் நிலையில் உருவாகியுள்ளது.
ஆனால், அதை எதிர்த்து ஆணையத்தில் முறையிடவும், எதிர்ப்பதற்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு தவறிவிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளன. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.