/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆணைய தலைவரிடம் அதிகாரிகளை 'போட்டுக்கொடுத்த' துாய்மை பணியாளர்கள்
/
ஆணைய தலைவரிடம் அதிகாரிகளை 'போட்டுக்கொடுத்த' துாய்மை பணியாளர்கள்
ஆணைய தலைவரிடம் அதிகாரிகளை 'போட்டுக்கொடுத்த' துாய்மை பணியாளர்கள்
ஆணைய தலைவரிடம் அதிகாரிகளை 'போட்டுக்கொடுத்த' துாய்மை பணியாளர்கள்
ADDED : மார் 19, 2025 01:56 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய துப்புரவாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில், துாய்மை பணியாளர் நலன் சார்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆணைய தலைவரிடம், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் சார்பில் கலியபெருமாள், ஆனந்தராஜ் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 22 ஆண்டுகளாக, தஞ்சாவூர் மாநகராட்சியில், ஒப்பந்த துாய்மை பணியாளராக பலர் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு கலெக்டரால் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் கூலியை முறையாக வழங்குவதில்லை.
ஒவ்வொரு முறையும் போராடி தான் சம்பளத்தை பெறுகிறோம். வேலை வாங்குவதில் குறியாக உள்ளனர். எங்களுக்கான உரிமையை தருவதில்லை. எங்களது ஊதியத்தில் இ.எஸ்.ஐ., - பி.எப்., தொகையை முறையாக பிடித்தம் செய்வதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த ஆணைய கூட்டத்தில், எங்களுக்கு வீடு வசதி கேட்டோம். அப்போது, அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதுவரை வழங்கவில்லை. மாதம், 15,000 ரூபாய் சம்பளம் வாங்கும் நாங்கள், வாடகைக்கு, 5,000 ரூபாய் செலவு செய்கிறோம். அதுபோக, இருக்கும் தொகையில் தான் குடும்பம் நடக்கிறது. நாங்கள் இப்படி தான் தினமும் அல்லல்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் கண்ணன், மாநகர நல அலுவலர் நாமச்சிவாயம் இருவரையும் அழைத்து, ஆணைய தலைவர் விசாரணை நடத்தினார்.
பின், ஒப்பந்த நிறுவனத்தில் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அவர், ஒப்பந்த தொழிலாளர்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும்; தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.