/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி
/
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி
ADDED : ஜன 31, 2024 01:14 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீஸத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுலபஞ்சமி தினத்தில் முக்தி அடைந்தார். அங்கு ஆண்டுதோறும், பகுலபஞ்சமி தினத்தில் ஸ்ரீஸத்குரு தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடைபெறும்.
அதன்படி, ஸ்ரீஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா, 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினம் காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிழ்வான நேற்று அதிகாலை, ஸ்ரீஸத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பாடாகி, மேளதாளங்கள் முழங்க, வீதியுலவாக அவரின் சன்னிதிக்கு வந்தனர்.
பின், நாதஸ்வரம் நிகழ்ச்சி, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கின.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, நித்யஸ்ரீ மகாதேவன், ஓ.எஸ்.அருண், கடலுார் ஜனனி, அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், சீர்காழி சிவசிதம்பரம் என, கர்நாடக சங்கீத கலைஞர்கள் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்.
நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் துவங்கி, கவுளை, ஆரபி,வராளி இறுதியாக ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீஸத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
அப்போது, ஸ்ரீஸத்குரு தியாகராஜ சுவாமிக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்களின் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் நிகழ்ச்சிகள், இரவு 10:40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.
வெளிநாட்டினர் ஆர்வம்:
ஆராதனை விழாவின் போது, போலந்து நாட்டை சேர்ந்த, 20 சுற்றுலாப் பயணியர், நிகழ்ச்சியை ரசித்து பார்த்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.