ADDED : மே 05, 2024 04:17 AM
கூடலுார் : கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள லோயர்கேம்பில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர்.
கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டாக உள்ளது லோயர்கேம்ப். தமிழக கேரள எல்லையான குமுளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படும் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. அருகிலேயே நீர்த்தேக்க தொட்டிகள் இருந்த போதிலும் லோயர்கேம்ப் காலனி பகுதியில் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
குடிநீர் வராததால் மக்கள் நேரடியாக முல்லைப் பெரியாற்றில் எடுத்துவந்து பயன்படுத்துகின்றனர்.
குளோரினேசன் செய்யாமல் பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பகிர்மான குழாய் விரைவில் சீரமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.