/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதி கோரி மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கோரி மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 19, 2024 05:41 AM

பெரியகுளம்: மலை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியகுளம் அருகே 7 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. அங்கிருந்து 9 கி.மீ., தொலைவில் போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, குரவன் குழி, சின்ன மூங்கில், பெரிய மூங்கில், பேச்சியம்மன் சோலை, கரும்பாறை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக மலை கிராமத்திற்கு தேவையான ரோடு வசதி, மருத்துவ வசதி, மின் வசதி, ரேஷன் கடை உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை தமிழக அரசுக்கு மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை அகமலை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, சாரதா உட்பட மலை கிராம மக்கள் மலை கிராமத்தில் இருந்து சோத்துப்பாறை அணை பகுதிக்கு வந்தனர். ஊரடிக்கு செல்லும் பாதையில் உட்கார்ந்து 'தேர்தலை புறக்கணிப்போம்' என போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 451 ஓட்டுகள் உள்ளது.
வார்டு உறுப்பினர் ரமேஷ் பாபு கூறுகையில்: அடிப்படை வசதிகள் செய்து தராததால் சிரமம் அடைகிறோம். சோத்துப்பாறை பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால் குதிரைகள் தான் பயன்படுத்த முடியும். மலை கிராமத்தில் இருந்து விளையும் பொருட்களை கீழே கொண்டுவர வேண்டும் என்றாலும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது என கோஷங்கள் எழுப்பினர். டி.எஸ்.பி., சூரக்குமாரன், இன்ஸ்பெக்டர் அமுதா மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

