ADDED : மார் 30, 2024 12:52 AM

சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுாரில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி, மகன் என மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சின்னமனுார் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் செவத்தி வீரன் 60. இவர் ஆனைமலையன்பட்டியில் உள்ள தனியார் மதுபாரில் வேலை செய்தார். இவரது மனைவி ஒச்சம்மாள் 52; சின்னமனூர் நகராட்சியில் தற்காலிக மஸ்துார் பணியாளராக வேலை செய்தார்.
மகன் ராஜேஷ் 30; தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்தார். ஒரு மகளுக்கு திருமணம் முடித்து பீஹாரில் வசிக்கிறார்.
குடும்பம் நடத்த வருமானம் போதாததால் அக்கம் பக்கத்தில் உள்ளோர், பைனான்ஸ் நிறுவனம் என பலரிடம் கடன் வாங்கி உள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டு நெருக்கடி தந்தனர்.
கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் நேற்று அதிகாலை மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். காலை 7:00 மணிக்கு அருகில் வசிக்கும் செவத்திவீரனின் தம்பி குடும்பத்தினர், வீட்டிற்கு சென்ற போது மூவரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சின்னமனுார் எஸ்.ஐ. சுல்தான் பாட்சா விசாரிக்கிறார்.
