ADDED : ஜூன் 25, 2026 05:30 PM
தேனி, ஜூன் 26-மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான ஆசிரியர் விபரங்கள் நகராட்சி, தாலுகா, ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலர்களுக்கு அனுப்பபட்டுள்ளன.
தமிழகத்தில் 2027 பிப்., முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புபணிகள் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு முதன்மை பயிற்சியாளர், கல்லுாரி பேராசிரியர்கள் நிலையில் 40 கள பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். மேற்பார்வையாளர்களாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் விபரங்கள் தாலுகா, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள பயிற்சியாளர்கள் மூலம் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு செயலியில் தகவல்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
