/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்
/
மூணாறு நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்
ADDED : டிச 03, 2025 05:58 AM

மூணாறு: மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் ஆம்புலன்ஸ் உள்பட அவசரமாக செல்லும் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.
மூணாறில் அரசு மருத்துவமனை இல்லை என்பதால், டாடா கம்பெனிக்கு சொந்தமான மருத்துவமனையை தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் சிகிச்சைக்காக நாடி வருகின்றனர்.
நகரில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் ரோடு குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. அந்த ரோட்டில் இருபுறங்களிலும் விதிமீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த ரோட்டில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படுகின்றன. அதனால் வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல இயலாமல் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
குறிப்பாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்பட வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. இரு தினங்களுக்கு முன்பு நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது போலீசார் பணியில் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் உள்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் விதிமுறை மீறல் தொடர்ந்து வருகிறது.

