ADDED : செப் 07, 2026 12:28 AM

கம்பம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் வேலப்பர் கோயில் அருகே நடந்த உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
கம்பம் யாதவர் மடத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. கம்ப ராயப் பெருமாள் ஊர்வலமாக சென்று வேலப்பர் கோயில் முன்பு நின்றார். அவர் முன்னிலையில் நள்ளிரவில் உறியடி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடந்தது.
30 அடி உயர கம்பத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் தொடர்ந்து 3வது ஆண்டாக மாலையம்மாள்புரம் ஹர்சன் 14, வழுக்கு மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருளை எடுத்து பரிசு பெற்றார். தொடர்ந்து உறியடி போட்டி நடந்தது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாதவர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.
