/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு : சரியான அளவில் இருந்த நீர்க்கசிவு
/
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு : சரியான அளவில் இருந்த நீர்க்கசிவு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு : சரியான அளவில் இருந்த நீர்க்கசிவு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு : சரியான அளவில் இருந்த நீர்க்கசிவு
ADDED : நவ 11, 2025 12:22 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணை 2024 அக். 1 முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் பிஸ்வநாத் சின்ஹா, கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ், தொழில்நுட்ப வல்லுநர்கள் ராகேஷ், ஆனந்த் ராமசாமி ஆகிய 7 பேர் உள்ளனர். இக்குழு கடந்த மார்ச் 22ல் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டது. இரண்டாவது முறையாக நேற்று காலை ஆய்வு மேற்கொண்டது.
தேக்கடியில் இருந்து படகு மூலம் 14 கி.மீ., துாரமுள்ள அணைப்பகுதிக்குச் சென்றனர். மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டனர். மெயின் அணை, பேபி அணையின் பின் பகுதியில் இறங்கி ஆய்வு செய்தனர். மெயின் அணையில் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்கத்தை கண்டறியும் சீஸ்மோகிராப், நில அதிர்வை கண்டறியும் ஆக்சிலரோ கிராப் கருவிகளை பார்வையிட்டனர். அணையில் இருந்து வெளியேறும் நீர்க்கசிவு அளவு எடுக்கப்பட்டது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் நான்காவது ஷட்டரை இயக்கிப் பார்த்தனர்.
இக்குழுவினருடன் தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரமேஷ், கண்காணிப்பு பொறியாளர் சாம்இர்வீன், செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மகேந்திரன், பாலசேகரன் உடன் இருந்தனர்.
மதுரையில் ஆலோசனை மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணைக் கண்காணிப்பு குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், தேக்கடியில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் நேற்று ஆய்வை முடித்த இக்குழு முதன் முறையாக மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆய்வு கூட்டத்தை நடத்தினர்.
துல்லியமாக இருந்த நீர்க்கசிவு
அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவின் அளவு மாறுபடும். 2025 மார்ச் 22ல் இக்குழு ஆய்வு மேற்கொண்ட போது நீர்மட்டம் 113.25 அடியாக இருந்தது. அப்போது நீர்க்கசிவு ஒரு நிமிடத்திற்கு 16 லிட்டர் இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 134.80 அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர்க்கசிவு நிமிடத்திற்கு 93.60 லிட்டர் ஆக இருந்தது. தற்போதைய நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவிலேயே நீர்க்கசிவு உள்ளதாக குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

