/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
/
பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : டிச 16, 2025 04:54 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அணை பாதுகாப்பு ஆணைய இயக்குனர் கிரிதர் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
இந்த அணை 2024 அக்., 1 முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் ஆணையத்தின் தலைவர் அணில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டிற்கு ஒரு முறை அணையில் ஆய்வு மேற்கொள்ளும்.
இக்குழுவிற்கு துணையாக, ஆணையத்தின் மண்டல இயக்குனர் கிரிதர் தலைமையில் புதிய துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டது.
துணைக் குழு மாதந்தோறும் அணையை ஆய்வு மேற்கொண்டு, பராமரிப்புப் பணிகள் செய்வது குறித்து மத்திய கண்காணிப்பு குழுவிற்கு விபரங்களை அனுப்பும். அதன் அடிப்படையில் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் நேற்று துணை கண்காணிப்புக்குழு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேக்கடியில் இருந்து படகு மூலம் பெரியாறு அணைக்குச் சென்றது.
கிரிதர் தலைமையிலான இக்குழுவில் தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வீன், செயற்பொறியாளர் செல்வம், கேரள அரசு சார்பில் கண்காணிப்புப் பொறியாளர் கோஷி, செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று நீர்மட்டம் 135.70 அடியாக இருந்த நிலையில் (மொத்த உயரம் 152 அடி) மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு இக்குழு ஆய்வு மேற்கொண்டது. சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மேற்கொண்ட, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தது.
அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 1, 6, 10 ஆகிய மூன்று ஷட்டர்கள் இயக்கிப்பார்க்கப்பட்டன.
அணைப் பகுதியில் பொருத்தப்பட்ட நிலநடுக்க கருவி (சீஸ்மோ கிராப்), நில அதிர்வுக் கருவி (ஆக்சிலரோ கிராப்) ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
உதவி செயற் பொறியாளர் ராஜகோபால், உதவி பொறியாளர்கள் மகேந்திரன், பாலசேகரன், நவீன்குமார் உடனிருந்தனர். மாலையில் குமுளி 1ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதற்கான ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
துல்லிய நீர்கசிவு நீர்மட்டம் 135.70 அடியாக இருந்த நிலையில் துணை குழு ஆய்வு மேற்கொண்ட போது நீர்க்கசிவு ஒரு நிமிடத்திற்கு 88 லிட்டராக இருந்தது. நீர்மட்டத்தின் உயரத்திற்கு ஏற்ப கசிவுநீர் துல்லியமாக இருப்பதால் அணை பலமாகவே உள்ளது என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

