ADDED : செப் 06, 2026 04:52 PM
பெரியகுளம், செப். 7---–
பெரியகுளம் பகுதியில் பழக்கடைகளில் பேரிச்சங்காய் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.இவை சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பழகடைகளில் சவுதி அரேபியாவில் இருந்து பேரிச்சம் காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த காய்கள் துவர்ப்புடன், சிறிதளவு இனிப்பு சுவையுடனும், மணமாகவும் உள்ளது. இவை கிலோ ரூ. 250 முதல் ரூ.280 வரை விற்பனையாகிறது. அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் பொதுமக்கள் விரும்பிவாங்கி செல்கின்றனர்.
பழ வியாபாரி முகமது அப்துல்லா கூறுகையில், இதனை வாங்கி சாப்பிட பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இவை சிறிய அளவிலான இளநீர் போல இருப்பதால் கடைகளில் தென்னங் குலை போன்று கட்டி பார்வைக்கு வைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகம் வாங்குகின்றனர் என்றார்.
