ADDED : நவ 03, 2024 04:07 AM
பெரியகுளம் :தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்
பெரியகுளம் நகராட்சியில் 50க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை. தினக்கூலியாக தலா ரூ.483 வீதம் அக்., சம்பளம் தீபாவளிக்கு முன் தருவதாக கூறி வழங்கவில்லை.
ஊழியர்களுக்கு வைப்பு நிதி, காப்பீடு கணக்குகள் பராமரிக்கவில்லை என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகரில் தூய்மை பணி முடங்கியது. இந்நிலையில் துாய்மை பணியாளர்கள் சம்பளம் வங்கி கணக்கில் வரவானது.
மேலும் நவ.4 ல் தனியார் நிறுவன மேலாளருடன், நகராட்சி தலைவர் சுமிதா, கமிஷனர் செல்வராஜ் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.
