ADDED : செப் 01, 2026 06:52 PM
ஆண்டிபட்டி, செப். 2-
தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் ஆண்டிபட்டி பகுதியில் விவசாய பணிகள் முடங்கி உள்ளன. இதனால் விவசாய தொழிலாளர்கள் மாற்று வேலை தேடி வெளியூர் செல்ல துவங்கி உள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழையை மட்டும் நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களும், நிலத்தடி நீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் இறவை பாசன நிலங்களும் உள்ளன. கோடை மழை, தென்மேற்கு பருவ மழை நீரை பயன்படுத்தி நிலங்களை உழுது, உரமிட்டு ஆடி, ஆவணியில் விதைப்பு பணியை துவங்குவார்கள். நடப்பு ஆண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை பொய்த்தது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் விவசாயக் கிணறுகள், போர்வெல்களிலும் நீர் சுரப்பு குறைந்து இறவை பாசன பரப்பும் குறைந்துள்ளது. மானாவாரி சாகுபடியில் விதைப்பு பணிகள் இன்னும் துவங்கவே இல்லை. விபி., ஜி ராம்ஜி திட்டத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினசரி வேலை கிடைப்பதில்லை. இதனால் விவசாய தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்திற்காக பக்கத்து ஊர்களில் கிடைக்கும் வேலைகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
