ADDED : மார் 24, 2026 11:10 PM
மூணாறு:மூணாறு அருகே கல்லார் எஸ்டேட், பாக்டரி டிவிஷனில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் காட்டில் இறந்த நிலையில் கிடந்தார். அப்பகுதியைச் சேர்ந்த நடராஜ் 63, நேற்று மதியம் 2:00 மணிக்கு விறகு சேகரிக்க காட்டிற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும்வீடு திரும்பாததால், அவரது மகன் சசிகுமார் சென்றார்.
அப்போது அவர் 27ம் எண் தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது கழுத்தில் ஆழமாக காயம் ஏற்பட்டு இருந்தது. அப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதால், அவை தாக்கி நடராஜ் இறந்து இருக்க கூடும் என சந்தேகம் எழுந்தது. மூணாறு வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோதும் இருள் சூழ்ந்ததால் ஆய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் நடராஜ் எவ்வாறு இறந்தார் என்பதை கண்டறிய இயலவில்லை. அவர் எவ்வாறு இறந்தார் என்பது இன்று தெரியவரும்.
.
