ADDED : மே 10, 2026 03:02 AM

மூணாறு: மூணாறில் எம்.ஜி., நகர் பகுதியில் நான்கு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ஷெட்டுகளை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர்.
தேவிகுளம் தாலுகாவில் டிஜிட்டல் சர்வே நடந்து வரும் நிலையில், அப்பணிகள் எம்.ஜி., நகர் பகுதியில் நடக்க உள்ளது. அதில் இடம் பெறுவதற்கு வசதியாக எம்.ஜி., நகர் பகுதியில் அரசு நிலம் நான்கு ஏக்கர் கொண்ட மலையை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோர் ஏப். 29ல் ஆக்கிரமித்து ஷெட்டுகள் அமைத்தனர்.
தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டதையடுத்து சிறப்பு தாசில்தார் காயத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் தலையிட்டு பிரச்னைக்கு முற்று புள்ளி வைத்தனர். ஆக்கிரமிப்புகளுக்கு பலர் உரிமை கொண்டாடியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எனினும் போலீசாரின் உதவியுடன் 11 ஷெட்டுகளை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனர்.
