ADDED : செப் 14, 2025 03:56 AM
உத்தமபாளையம்:பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பவில்லை என கூறி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
க.புதுப்பட்டி காந்திஜி தெருவில் வசிப்பவர் சரவணமுருகன் 48, இவர் இங்குள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சாருமதி 17, ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். தந்தைக்கு போன் செய்து தனக்கு படிக்க பிடிக்கவில்லை என சாருமதி கூறியுள்ளார். ஃ
தந்தை கல்லூரிக்கு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த மகள் 'நான் உங்களுக்கு பயனில்லாமல் சுமையாக இருக்கிறேன்', என்று கூறி புலம்பியுள்ளார். பெற்றோர் சமாதானம் செய்தனர்.
நேற்று முன்தினம் தந்தை வேலைக்கு சென்றார். தாய் கடைக்கு சென்றுள்ளார். அந்த நேரம் பெட்ரூமில் சாருமதி தூக்கிட்டு தொங்கியவாறு இருந்தார்.
வீட்டிற்கு வந்த தாய் இதனை பார்த்து அலறியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சாருமதியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.