ADDED : மார் 05, 2024 04:14 AM
கம்பம், : கடந்த மாதம் கிலோ ரூ.600க்கு விற்ற வெள்ளைப்பூண்டு யாரும் எதிர்பாராத வகையில் கிலோ ரூ.150 முதல் ரூ.200 விலையில் கிடைக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையலில் வெள்ளைப்பூண்டு இன்றியமையாத பொருளாக உள்ளது. பூண்டு மலைப் பிரதேசங்களில் அதிகம் சாகுபடியாகிறது. இந்தியாவில் மத்தியப்பிரதேசம், பீஹார், ஹரியானா, பஞ்சாப், உத்ரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், தாண்டிகுடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகிறது.
மாவட்டத்தில் வடுகபட்டியில் வாரம் இருநாட்கள் நடைபெறும் சந்தையிலிருந்து வெள்ளைப் பூண்டு மாநிலம் முழுவதும் செல்கிறது. வெள்ளைப்பூண்டு கடந்த மாதம் கிலோ ரூ.500 முதல் 600 வரை இருந்த விலை, இம் மாதம் தற்போது கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்கிறது. இந்த விலை குறைவு குறித்து கம்பம் வர்த்தக சங்க தலைவர் முருகன் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக வரத்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பூண்டு அறுவடை துவங்கியதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ தற்போது ரூ.150 முதல் ரூ.200 விலை உள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை குறைவு என்றார். இதனால் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

