ADDED : ஆக 15, 2026 05:53 AM
போடி: போடி பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆக., 31க்குள் பயிர் காப்பீடு செய்து பயன் அடைமாறு வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது : போடி, ராசிங்காபுரம், சிலமலை, கோடாங்கிபட்டி பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலைக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகள் பாதுகாத்து கொள்ள பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயற்கை சீற்றம், வறட்சி, பேரிடர், பூச்சி நோய் தாக்கு தலால் மகசூல் பாதிக்கப்பட்டால் நிலக்கடலை பயிர் ஏக்கருக்கு ரூ. 29,837 காப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.597 செலுத்த வேண்டும். ஆக., 31க்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
சிட்டா, அடங்கல் , வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் நகல் உட்பட உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ சேவை மையம் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு போடி வட்டார வேளாண்உதவி இயக்குநர் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
