மூணாறில் அடிப்படை வசதிகளுக்கு எதிர்பார்ப்பு குறித்து எம்.எல்.ஏ., சட்டசபையில் பேச்சு
மூணாறில் அடிப்படை வசதிகளுக்கு எதிர்பார்ப்பு குறித்து எம்.எல்.ஏ., சட்டசபையில் பேச்சு
UPDATED : ஜூன் 30, 2026 04:17 PM
ADDED : ஜூன் 30, 2026 03:12 PM

மூணாறு:மூணாறுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா சட்டசபையில் பட்டியலிட்ட நிலையில், அதற்கு அரசு செவி சாய்க்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா நகரான மூணாறு, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது. இதுவரை நகர் விரிவாக்கம், உள் கட்டமைப்பு உள்பட எவ்வித மாற்றமும் இல்லாததால், அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக கழிப்பறை, பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, வாகனம் நிறுத்தும் இடம் உள்பட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் நீண்ட காலமாக அவதியுற்று வருகின்றனர்.
இதுவரை மாநிலத்தில் ஆட்சி செய்த அரசுகள் மூணாறை கண்டு கொள்ளவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு தேவிகுளம் தொகுதியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய நிலையில் எப்.ராஜா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அதேபோல் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் மூணாறு மீது அரசின் கவனம் திரும்பிய நிலையில் கடந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது.
அதேபோல் கடந்த வாரம் சட்டசபையில் தமிழில் உரையாற்றிய எம்.எல்.ஏ. ராஜா, மூணாறுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடு ஆகியவற்றை குறித்து பட்டியலிட்டார். அதற்கு அரசு செவி சாய்க்குமா என பொது மக்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
