ADDED : ஜூன் 19, 2026 01:31 AM

தேனி: தேனி நகராட்சி பகுதியில் சோதனை அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது.
தமிழகத்தில் மக்கட்தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்., நடக்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
மாவட்டம் தோறும் ஒரு முதன்மை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் களப்பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள். மாவட்டத்தில் கள பயிற்சியாளர்களாக 40 கல்லுாரி பேராசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் புவியியல்துறை துணை இயக்குநர் ஜான்சிராணி தலைமையில் கணக்கெடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
நேற்று சோதனை முறையில் கள பயிற்சியாளர்கள் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
அரசு வழங்கி உள்ள பிரத்யேக செயலியல் கேட்கப்பட்டுள்ள 34 வினாக்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கேட்டனர்.
அதனை அலைபேசி செயலியில் பதிவேற்றம் செய்தனர்.
களப்பயிற்சியாளர் மூலம் மக்கட்தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
