ADDED : பிப் 07, 2026 06:13 AM
கம்பம்: தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பற்றிய விபரங்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதில் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.
அரசின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு சாதாரண இந்திய குடிமகனுக்கும், நிர்வாக ரீதியான விஷயங்கள், அரசின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள உரிமை உண்டு. ஆனால் தேனி மாவட்ட போலீசார் இந்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கையாழ்கின்றனர்.
சமீப காலங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில், எந்த தகவல் கேட்டாலும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். எந்தவொரு வழக்காக இருந்தாலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்ற ஒருவரி பதில் கூறுகின்றனர். வழக்கில் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கின் எப்.ஐ.ஆர் மற்றும் இதர ஆவணங்கள், ரிமாண்ட் செய்யப்படும் நபர்களை ஆஜர்படுத்திய பின்பும், ஸ்டேஷன்களில் விபரங்களை வழங்க மறுக்கும் சூழல் உள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்சிட்டிவ் வழக்குகளில் விபரம் கூற வேண்டாம்.
சாதாரண வழக்கிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் கூற மறுக்கின்றனர். ஒரு வழக்கில் விசாரணை முடிந்து, கோர்ட்டிற்கு சம்பந்தப்பட்ட நபரை கொண்டு சென்ற பின் முழுமையான தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு தர எஸ்.பி. சினேஹபிரியா உத்தரவிட வேண்டும்.

