ADDED : ஜன 02, 2026 05:40 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்துள்ள நெல் பயிரில் எலித் தொல்லை துவங்கி உள்ளது.
எலித் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை ஆலோசனையில் கூறியிருப்பதாவது: கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டாரங்கள் நெல் நடவு நடக்கிறது. கம்பம் சாமாண்டிபுரம், மஞ்சக்குளம், ஆங்கூர்பாளையம் பகுதிகளில் நடவு முடிந்து ஒரு மாதமாகிறது. முதல் போகத்தில் எலித் தொல்லை இருக்காது. காரணம் வயலை உழுது, வரப்புகளை பராமரிப்பு செய்வதால் எலிகள் இருக்காது. இரண்டாம் போகத்தில் பாதிப்பு இருக்கும். தற்போது நடவு செய்து ஒரு மாதம் ஆன வயல்களில் எலித் தொல்லை ஆரம்பமாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எலிகளால் நெல் சாகுபடியில் 5 முதல் 10 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது. எலிகளை கட்டுப்படுத்த வயல்களில் குறுகலான வரப்பு அமைக்க வேண்டும். ஆட்டுக் கிடை அமைத்தால் எலி வராது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வேலி பயிராக வளர்க்கலாம். சணப்பு பூவை சிறியதாக வெட்டி வயலில் ஆங்காங்கே போட்டாலும் எலித் தொல்லை இருக்காது.
பசுஞ் சாணத்தை வயலிலும் வரப்பிலும் ஈடலாம். பருவமில்லா காலங்களில் பொந்துகளை தோண்டி எலிகளை அழிக்கலாம். நடவு செய்த 3,- 4 வாரங்களுக்கு பின் ஜிங்க் பாஸ்பேட் அல்லது புரோமோடையோ லோன் வைத்து கட்டுப்படுத்தலாம். மூங்கில் பொறிகள் எக்டேருக்கு 100 வைத்து தொடர்ச்சியாக எலிகளை பிடிக்கலாம். ஆந்தை, பிற பறவைகள் அமர்வதற்கான T வடிவ குச்சிகளை 40 முதல் 50 வரை வைக்கலாம்.
அந்த ஓலைகளில் பனை இலைகளை கட்டி வைக்கலாம். பப்பாளி காய்களை நறுக்கி வரப்புகளில் ஆங்காங்கே வைக்கலாம். ஜிங்க் பாஸ்பேட்டுடன் பொறிக்கப்பட்ட சோளம், கருவாடு, அரிசி போன்றவற்றை 1:49 என்ற விகிதத்தில் கலந்தும், எலிப் பொந்துகளில் 0.5 கிராம் அலுமினிய பாஸ்பேட்டை ஒரு பொத்துக்கு 2 மாத்திரைகள் வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

