/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பைபாஸில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை
/
பைபாஸில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை
ADDED : மார் 31, 2025 07:12 AM
கம்பம் :' தேனி மாவட்டத்தில் பைபாஸ் சந்திப்புகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பைபாஸ் ரோட்டிலும் ஆரம்பம், முடியும் இடங்களில் தினமும் ஏதாவது ஒரு வாகன மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பைபாஸ் சந்திப்புக்களில் ஊருக்குள் வாகனங்கள் செல்ல 3 ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் எந்தவிதமான போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான வரைபடங்களோ, அல்லது எந்த வாகனம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள், எச்சரிக்கை பலகைகள் இல்லை. கிராமப் பகுதிகளாக இருப்பதால், பைபாஸ் சந்திப்புக்களில் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக உத்தமபாளையம் பைபாஸில் தென்னஞ்சாலை, கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி விலக்கு ஆகிய இடங்களிலும், சின்னமனுார் பைபாஸ் ரோடு நுழையும் 2 சந்திப்புக்கள் மற்றும் மார்க்கையன்கோட்டை சந்திப்பு ஆகிய இடங்களிலும், கம்பம் பைபாஸ் பகுதியிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கும் பட்சத்தில் விபத்துக்கள் தவிர்க்கப்படும். தற்போது தேனி போடி விலக்கில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்து பைபாஸ் சந்திப்புக்களிலும் ரவுண்டானா அமைத்தால் விபத்துக்கள் ஏற்படாது என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.