ADDED : ஜூலை 25, 2025 03:05 AM
போடி: இயற்கை உரத்திற்காக தக்கை பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு பதிலாக தற்போது செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறி விளை பொருட்களின் சுவையும் குறைந்து வருகிறது.
இதனை தவிர்க்க தக்கை பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் நன்கு வளர்ந்து பூ பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம். இதனால் சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைக்கும். மண்ணின் தன்மை மாறாமல், மண்புழுக்கள் இறக்காமல் உரமாகவும், தலைச்சத்தாகவும் பயன்படுகிறது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் தக்கை பூண்டு செடிகள் பயிரிட வேளாண் துறையில் தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக கிலோ ரூ.67 வீதம், ஏக்கருக்கு 20 கிலோ முன் பதிவு அடிப்படையில் ஜூலை 28 முதல் தக்கை பூண்டு விதைகள் வழங்கப்படுகிறது.
தக்கை பூண்டு பயிரிட விரும்பும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோவுடன் போடி வேளாண் அலுவலகம், உப்புக்கோட்டை, கோடங்கிபட்டி, சிலமலை துணை வேளாண் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.