தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தானியங்கி தேர்வு தளம் எதிர்பார்ப்பு
தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தானியங்கி தேர்வு தளம் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 24, 2026 07:31 PM
தேனி, ஆக. 25–
தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தானியங்கி ஓட்டுனர் தேர்வு களம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு டூவீலர், கார் உள்ளிட்டவற்றுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மாதம் 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பாதையில் வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும். இதனால் உரிமம் பெற வருபவர்களின் ஓட்டும் திறனை பரிசோதிக்க தாமதம் ஏற்படுகிறது. எனவே தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சென்சார், டிராபிக் சிக்னல், நவீன கேமராக்கள் கொண்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். இதன் மூலம் ஓட்டுனர் உரிம சோதனை நேரம் குறைவதுடன், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. எனவே தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தானியங்கி தேர்வு களம் அமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் இம்முறை செயல்படுத்தப்படுகிறது.
