ADDED : பிப் 28, 2026 06:03 AM
மூணாறு: குண்டளை சான்டோஸ் காலனியில் மூன்று பசுக்களை புலி தாக்கிய பகுதியில் இரண்டு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் சான்டோஸ் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த மணி, தங்கச்சன், ஸ்ரீ முருகன் ஆகியோரது பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அவற்றை தேடியபோது, அப்பகுதியில் வனத்தையொட்டி உள்ள விளை நிலத்தில் புலி தாக்கி பலத்த காயங்களுடன் மூன்று பசுக்கள் கிடந்தன.
தேவிகுளம் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி பசுக்களை புலி தாக்கியதை உறுதி செய்தனர். பலத்த காயம் அடைந்த பசுக்களுக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேவிகுளம் வனத்துறை அதிகாரி அருண்குமார் தலைமையில் வனக்காவலர்கள் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

