/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காப்பு காடுகளிலும் புலிகள் கணக்கெடுப்பு
/
காப்பு காடுகளிலும் புலிகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 20, 2026 06:06 AM
கம்பம்: புலிகள் காப்பகங்கள் அல்லாத காப்பு காடுகளிலும் புலிகள் கணக்கெடுப்பை இந்தாண்டு முதல் நடத்த தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை உத்தரவிட்டது.தேனி மாவட்டத்தில் ஜன.,18 முதல் காப்பு காடுகளில் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
புலிகள் அழிந்து வரும் வன உயிரினங்கள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் புலிகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. தமிழகத்தில் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
அதில் ஸ்ரீவி., மேகமலை காப்பகமும் ஒன்றாகும். ஒவ்வொரு 4 ஆண்டிற்கு ஒரு முறை தேசிய அளவில் அனைத்து புலிகள் காப்பகங்களிலும், புலிகள் கணக்கெடுக்க படுகிறது.
கணக்கெடுப்பு 45 நாட்கள் நடைபெறும். பிளாக் கவுண்ட், நேர்கோட்டில் நடந்து சென்று பார்ப்பது, கேமரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட முறைகள் பின்பற்றப்படுகிறது.
புலிகள் காப்பகங்களில் கடந்த 12 நாட்களாக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
தேனிமாவட்டத்தில் மேகமலையில் கணக்கெடுப்பு நடக்கிறது.
இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை இந்தாண்டு முதல் புலிகள் காப்பகங்கள் அல்லாத காப்பு காடுகளிலும் புலிகள் கணக்கெடுப்பு நடத்த கடந்த வாரம் உத்தரவிட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில் ஜன.18 முதல் கம்பம் மேற்கு, உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தேனி ஆகிய வனசரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது. வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 110 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காப்பகங்களில் பின்பற்றப்படும் முறையே காப்பு காடுகளிலும் பின்பற்றப்பட உள்ளது. கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் கூறுகையில், இந்த கணக்கெடுப்பு பணி 45 நாட்கள் வரை நடைபெறும் என்றார்.

