ADDED : செப் 15, 2026 06:43 PM
மூணாறு, செப்.16-
ராஜமலையில் சுற்றுலா பகுதிக்குள் மூன்று புலிகள் நடமாடியதால், அவற்றை கண்டு அஞ்சி வரையாடுகள் மாயமாகின.
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் அதிகம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அங்கு சுற்றுலா பகுதிக்குள் நேற்று முன்தினம் மதியம் மூன்று புலிகள் நடமாடின. அவற்றை வரையாடுகள் பார்த்ததால், நேற்று முன்தினம் வரை கூட்டமாக வலம் வந்த வரையாடுகள் அச்சத்தில் மாயமாகின. ராஜமலையில் புலிகள் நடமாட்டத்தை பார்த்த பிறகு வரையாடுகளின் நடமாட்டத்தை காண முடியவில்லை. அவை உயிருக்கு அஞ்சி மலைகள் மீது சென்று இருக்கலாம் என தெரியவந்தது.
விரட்டியது: ராஜமலை பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக சென்றால் அரை கி.மீ., தூரத்தில் உள்ள கடலார் எஸ்டேட் உள்ளது. அப்பகுதியில் செப்.13ல் காலை 11:00 மணிக்கு ரோட்டில் புலி நடந்து சென்றதை பலர் பார்த்தனர். அதே பகுதியில் வெஸ்ட் டிவிஷனில் 12ம் எண் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று காலை இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து காட்டு யானைகள் முகாமிட்டன. அவற்றை காலை 7:30 மணிக்கு இரண்டு புலிகள் விரட்டியதால், பலமாக பிளிறின. அதனை பணிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த தொழிலாளர் பார்த்தனர்.
தோட்ட பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், தற்போது தினமும் நூற்றுக் கணக்கில் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா பகுதியில் புலி நடமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
