இடுக்கியில் ஐந்து மையங்களில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வினியோகம்
இடுக்கியில் ஐந்து மையங்களில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வினியோகம்
ADDED : ஏப் 09, 2026 07:46 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஐந்து மையங்களில் இருந்து ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று (ஏப்.9) தேர்தல் நடக்கிறது.
தேவிகுளம் தொகுதியில் மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளி, உடும்பன்சோலை தொகுதியில் நெடுங்கண்டம் புனித செபாஸ்டியன் மேல்நிலை பள்ளி, தொடுபுழா தொகுதியில் தொடுபுழா நியூமன் கல்லூரி, இடுக்கி தொகுதியில் பைனாவ் உண்டு, உறைவிட பள்ளி, பீர்மேடு தொகுதியில் குட்டிகானம் மரியகிரி ஆங்கிலம் மீடியம் பள்ளி ஆகியவற்றில் இருந்து நேற்று ஓட்டு பதிவு இயந்திரங்கள் உள்பட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
இந்த மையங்களில் ஓட்டு பதிவுக்கு பின் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
முதலில் அனுப்பி வைப்பு தேவிகுளம் தொகுதியில் 215 ஓட்டு சாவடிகள் உள்ளன.
இங்கு மாநிலத்தில் முதன்முதலாக மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமலை குடி ஊராட்சி அடர்ந்த வனத்தினுள் உள்ளது.
அங்கு சொசைட்டிகுடி, மிளகுதராகுடி, பரப்பியாறுகுடி ஆகிய பகுதிகளில் ஓட்டு சாவடிகள் உள்ளன. சொசைட்டிகுடி தவிர பிற பகுதிகளுக்கு ரோடு வசதி இல்லாததால் தேர்தலுக்கு பயன்படுத்தும் ஓட்டு பதிவு இயந்திரம் உள்பட பொருட்கள் தலை சுமையாக கொண்டு செல்லப்படும்.
அதனால் அப்பகுதிகளுக்கு முதலில் ஓட்டு பதிவு இயந்திரங்களை வழங்கி தேவிகுளம் சப் கலெக்டரும், தொகுதியின் தேர்தல் அதிகாரியுமான ஆர்யா வினியோகத்தை துவக்கி வைத்தார்.
அப்பகுதிகளில் தொலை தொடர்பு வசதி இல்லாததால் 'வயர்லெஸ்' வசதி செய்யப் பட்டுள்ளது.
அப்பகுதிக்கு தேர்தல் பணிக்கு செல்ல அலுவலர்கள் தாமாக முன் வந்ததால், தேர்தல் பணிகள் சுமூகமாக நடக்க வாய்ப்புள்ளதாக சப் கலெக்டர் ஆர்யா தெரிவித்தார்.
