UPDATED : செப் 02, 2026 04:04 PM
ADDED : செப் 02, 2026 03:53 PM
தேனி:'டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் தண்ணீர் சேமித்துள்ள பாத்திரங்கள், குடங்களை மூடி வைக்க வேண்டும்,' என தேனி நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா அறிவுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: டெங்கு கொசுக்கள் நன்னீரில் மட்டும் முட்டை இடுகின்றன. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே தண்ணீர் சேமிக்க, கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், சிமென்ட் தொட்டிகள், உடைந்த குடங்களை மூடி வைக்க வேண்டும். நகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகள் தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். திறந்த வெளியில் தண்ணீர் சேமித்திருந்தால் மூடி வைக்க அறிவுறுத்துகின்றனர்.
அந்த சேமிப்பு கலன்களில் மருந்துகள் ஊற்றுகின்றனர். கடைகளில் திறந்த பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்தால் அபராதம் விதிக்கிறோம். நகர்பகுதியில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
