/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தீயணைப்புத்துறை வழக்கில் மூவர் ஜாமின் மனு தள்ளுபடி
/
தீயணைப்புத்துறை வழக்கில் மூவர் ஜாமின் மனு தள்ளுபடி
தீயணைப்புத்துறை வழக்கில் மூவர் ஜாமின் மனு தள்ளுபடி
தீயணைப்புத்துறை வழக்கில் மூவர் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : டிச 20, 2025 05:40 AM

திருநெல்வேலி: தீயணைப்பு துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க பணம் வைத்த வழக்கில் கைதான மூன்று பேரின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைப்பதற்காக தீயணைப்பு துறையினரே அவரது அலுவலகத்தில் நவ.17 நள்ளிரவில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கொண்டு வைத்தனர்.
அவர்களே தந்த புகாரில் விஜிலென்ஸ் போலீசார் அங்கு ஆய்வு செய்து மறைத்து வைத்த பணத்தை எடுத்தனர். சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அந்த அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் இரவில் பணம் வைக்கப்பட்ட விஷயம் அம்பலமானது.
சரவணபாபு புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீயணைப்புத்துறை வீரர்கள் ஆனந்த், மூர்த்தி, முருகேஷ் மற்றும் பணம் வைத்த நபர் விஜய், உதவிய முத்துசுடலை ஆகியோரை கைது செய்தனர்.
இதில் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தேடப்படுகிறார்.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மத்திய சிறையில் இருக்கும் தீயணைப்பு வீரர் ஆனந்த் மற்றும் முத்துசுடலை, விஜய் ஆகியோர் சார்பில் ஜாமின் கோரி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
ஒரு அரசு அதிகாரியை சிக்க வைத்த வழக்கு என்பதாலும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே விசாரணை இருப்பதாலும் ஜாமின் தர மறுத்த மாஜிஸ்திரேட் சத்யா மனுவை தள்ளுபடி செய்தார்.

