/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மணிமுத்தாறு கால்வாயில் உடைப்பு
/
மணிமுத்தாறு கால்வாயில் உடைப்பு
ADDED : டிச 17, 2025 05:56 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின், பிரதான கால்வாயான 80 அடி கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை, மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும் நேரங்களில், பாசனத்திற்காக 80 அடி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த பொட்டல் கிராமம் முதல் சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 98 அடிக்கு மேல் உள்ளது. வினாடிக்கு 440 கனஅடி தண்ணீர் 80 அடி கால்வாய் வழியாக திறக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வீரவநல்லுார் அடுத்த ரெட்டியாபுரம் - கொப்பரை செட்டு பகுதியில் 80 அடி கால்வாயில் நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் அருகிலுள்ள வயல்களுக்குள் புகுந்து, நெற்பயிர்களை மூழ்கடித்தது. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கால்வாயை முறையாக பராமரிக்காததும், காலந்தோறும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததுமே இந்த உடைப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே பொதுப்பணித்துறையினர், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிக தடுப்பு அமைத்து சீரமைக்கின்றனர்.பணி முடிய சில தினங்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே கால்வாயில் பட்டங்காடு பகுதியில் கரை மணல் சரிவு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் மட்டம் உயர்ந்து பலவீனமான இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே 80 அடி கால்வாய் முழுதையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, அதிகாரிகள் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். உடைப்பு விரைவில் சீரமைக்கப்பட்டு, நாளைக்குள் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

