/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
/
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
ADDED : பிப் 15, 2026 03:07 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் மாநில அளவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு ஊர்களில் பங்கேற்று வருகிறார். நேற்று திருநெல்வேலி தச்சநல்லுாரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தொண்டர்கள் திரட்டப்பட்டிருந்தனர்.
நேற்று மதியம் திருநெல்வேலி வந்த அமைச்சர், மாவட்டக் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர், அவசர காரணத்தால் மதுரை திரும்ப வேண்டியிருப்பதாக கூறி, தச்சநல்லுார், வீரவநல்லுாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களை ரத்து செய்யுமாறு கட்சியினருக்கு தெரிவித்து விட்டு புறப்பட்டார்.
இன்று (பிப்.,15) மதுரையில் நடைபெறும் தென் மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட வேண்டியிருப்பதால் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்களில், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக தி.மு.க., வட்டாரங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக, “தி.மு.க.வுடன் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன; அதை முதல்வர் பார்த்துக் கொள்வார்” என்றும், காங்கிரஸ் குறித்து கிண்டல் செய்யும் வகையிலும் பேசியுள்ளார்.
த.ம.மு.க., கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் தி.மு.க.-வில் ஒரு சீட் கேட்டது, ஸ்ரீவில்லிபுத்துார் வழங்க முன்வந்தபோது அவர் சங்கரன்கோவில் வேண்டும் என கேட்டது உள்ளிட்ட விவரங்களையும் மேடையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜான் பாண்டியன் நீண்ட காலமாக தே.ஜ., கூட்டணியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகள் குறித்து ராஜகண்ணப்பன் தொடர்ந்து பேசும் சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பதற்காகவே, அவரது பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்வி தி.மு.க., வட்டாரங்களில் எழுந்துள்ளது.

