/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி மரணம்
/
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி மரணம்
ADDED : ஜன 13, 2025 01:15 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, 56, ஓராண்டிற்கு மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. வயோதிகம், மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு, பின்னங்காலில் புண் என, பல்வேறு பாதிப்புகளால் துவண்டு போனது. யானையால் மூன்று நாட்களாக படுக்க முடியவில்லை. நின்றபடியே துாங்கியது.
தாமரைக்குளம்
நேற்று முன்தினம் மாலை படுத்த யானையால் மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை. அறநிலையத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கிரேனில் பெல்ட் கட்டி யானையை துாக்கி நிறுத்தினர்.
இருப்பினும் யானை படுத்துவிட்டது. அடுத்தடுத்த சிகிச்சைகளுக்கு தயாரான நிலையில் நேற்று காலை, 7:20 மணிக்கு யானை இறந்தது.
யானை மறைவால் நெல்லையப்பர் கோவில் உள்நடை அடைக்கப்பட்டது. வடக்கு பிரகாரத்தில் யானை உடலுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்தனர். யானை பாகன் ராமதாஸ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க இருந்தனர்.
அறங்காவலர் குழு தலைவர் செல்லையா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யானை உடல் மதியம், 1:30 மணிக்கு லாரியில் நான்கு ரத வீதிகள் வழியாக மாநகராட்சி ஆர்ச் அருகில் உள்ள தாமரைக்குளம் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வீதிகளில் வரும் போது பொதுமக்கள் பூக்கள் துாவி கண்ணீர் மல்க பிரியாவிடை தந்தனர்.
முன்பு தாமரைக்குளமாக இருந்த இடம் தற்போது நெல்லையப்பர் கோவிலின் வாகன நிறுத்தமாக உள்ளது. அங்கு குழி தோண்டப்பட்டது. அதில், சாக்கடை நீர் வந்ததால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், அங்கு இன்னொரு இடத்தில், 15 அடி ஆழ குழி தோண்டப்பட்டது.
வனத்துறை டாக்டர் மனோகரன், கால்நடை டாக்டர் மாரியப்பன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் அங்கேயே யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இறுதி அஞ்சலி
குழியில் மஞ்சள், விபூதி, பால், சந்தனம், உப்பு போன்றவை துாவப்பட்டன.
தாமரைகுளம் வளாகத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு, கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் யானை கிரேன் வாயிலாக குழியில் இறக்கப்பட்டு நல்லடக்கம் நடந்தது.
மாலை, 4:30 மணிக்கு பிறகு நெல்லையப்பர் கோவில் நடை திறக்கப்பட்டது.