/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலஅதிர்வு அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு
/
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலஅதிர்வு அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலஅதிர்வு அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலஅதிர்வு அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு
ADDED : செப் 23, 2024 02:15 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் நில அதிர்வு குறித்து எந்த பதிவும் இல்லை என அரசு மறுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கிராமங்களிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி, முதலியார்பட்டி பொட்டல்புதூர், ரவண சமுத்திரம், சிவசைலம், ஆம்பூர் வாகைகுளம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை 11:55 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகள் லேசாக அதிர்ந்தன. வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன.
விக்கிரமசிங்கபுரத்தில் சில வீடுகளில் விரிசல்கள் விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளிலிருந்து வெளியேறினர். இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையடிவார கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அரசு மறுப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,'நிலநடுக்கம் குறித்து சிஸ்மோ கிராபியில் ரிக்டர் அளவில் எந்த பதிவும் இல்லை. நில அதிர்வால் பெரிய சேதங்களோ யாருக்கும் காயங்களோ இல்லை. இது குறித்து களஅலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. மிக லேசான நில அதிர்வு சிஸ்மோ பதிவில் பதிவாகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
1990களில் அதிர்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூனிப்பட்டி வனப்பகுதியில் நேற்று முன்தினம் 300 அடி நீளத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நில அதிர்வு 1990 களில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள அபிஷேகபட்டி வழியே பூமிக்கு அடியில் நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2001 நவம்பர் 24ல் சுரண்டை அருகே ஆனைகுளத்தில் உருகிய பாறை குழம்புகள் வெடித்து சிதறி வெளியேறின. 1998ல் அபிஷேகப்பட்டியில் பாறை குழம்புகள் உருகி வெளியேறின. இதில் மின் கம்பங்கள் உருகிப் போயின. 1999 இல் திருப்பணிகரிசல்குளம், 2000 ஆண்டில் பிப்ரவரி 26ல் களக்காடு - ஏர்வாடி அருகேயும், 2001ல் மருத குளத்திலும் இத்தகைய பூமியிலிருந்து பாறை குழம்புகள் உருகி வெளியேறுவதும் சில இடங்களில் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன என அப்பகுதியினர் தெரிவித்தனர்.