ADDED : அக் 15, 2025 01:31 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகளிர் திட்ட இயக்குனர் லக்குவன் 57, மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படும் மகளிர் திட்டத்தில் இயக்குனராக இருப்பவர் லக்குவன். சுய உதவிக்குழு உள்ளிட்ட அரசின் மகளிர் திட்டங்களை கவனிக்கிறார். ஜூன் 25 ல் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு வள மைய ஊழியராக பணிபுரியும் 20 வயது பெண்ணிடம் அலுவலக பதிவேடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பெண்ணின் குடும்ப சூழ்நிலைகளை கேட்டார்.
பெண் தொடர்ந்து மேல் படிப்பு படிக்க உதவுவதாக கூறி அலுவலகத்தில் பாதி திரை மாட்டிய அறைக்குள் சென்று தவறான எண்ணத்தில் பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு லக்குவன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து விசாகா கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு அதன் விசாரணை முடிந்தும் திட்ட இயக்குனர் மீது எந்த நடவடிக்கை இல்லை என மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.