/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க., கிடையாது'
/
'தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க., கிடையாது'
ADDED : நவ 23, 2025 02:22 AM
திருநெல்வேலி: ''தமிழகத்தில் தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க. இல்லை. ஆட்சி முறையையே மாற்ற வேண்டும்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் நேற்று முன்தினம் கடலம்மா மாநாடு நடத்திய சீமான், நேற்று பணகுடி மலைப்பகுதியில் மேய்ச்சல் நில உரிமைக்காக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சீமான் போராட்டம் நடத்த முடியவில்லை. இந்நிலையில் திருநெல்வேலியில் சீமான் கூறியதாவது:
மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது. சபாநாயகர் அப்பாவுவிற்கு அங்கு நிலம் உள்ளது. அதனால் தான் எனக்கு பணகுடி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கால்நடைகளுக்கான நிலங்களில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பால் தேவையை ஆந்திரா பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து வரும் பால் துாய்மையானதா என்ற கேள்வி எழுகிறது. மெட்ரோவால் சிங்காரச் சென்னை இல்லை. துாண் சென்னை தான் உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் மக்களுக்கு மறைமுகமாக பணம் கொடுப்பதற்கு சமம். இலவசத் திட்டங்கள் அவசியமில்லை. தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க. அல்ல. ஆட்சி முறையையே மாற்ற வேண்டும். தி.மு.க., -அ.தி.மு.க., பா.ஜ., -- காங்கிரஸ் இடையே எந்த கொள்கை வேறுபாடும் இல்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் எனப் பாடும் விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை. பீஹாரில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்து பா.ஜ. வெற்றி பெற்றது போல, தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3000 அல்லது ரூ. 5000 கொடுக்கலாம். ஓட்டிற்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்திற்கு தேவை என்றார். விஜயின் அடுத்த அரசியல் பிரசார பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

