/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கங்கைகொண்டான் ஐடி.,பார்க்கில் அமைச்சர் ஆய்வு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என புகார்
/
கங்கைகொண்டான் ஐடி.,பார்க்கில் அமைச்சர் ஆய்வு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என புகார்
கங்கைகொண்டான் ஐடி.,பார்க்கில் அமைச்சர் ஆய்வு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என புகார்
கங்கைகொண்டான் ஐடி.,பார்க்கில் அமைச்சர் ஆய்வு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என புகார்
ADDED : ஆக 01, 2011 02:07 AM
திருநெல்வேலி : கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் எந்தவித
அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கங்கைகொண்டான் ஐடி., பார்க்கை
ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.கங்கைகொண்டானில் உள்ள தகவல்
தொழில்நுட்ப பூங்காவை அமைச்சர் உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர்
அவர் நிருபர்களிடம் கூறியதாவது;தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் 8 ஐடி.,
பூங்காக்கள் கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டன. முதல்வரின் உத்தரவின்
பேரில் இந்த ஐடி., பார்க்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு
வருகிறேன். இன்று(நேற்று) கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஐடி., பார்க் முழுவதும் நேரில் சென்று
ஆய்வு செய்தேன்.கடந்த ஆட்சிக்காலத்தில் அவசர கோலத்தில் தேர்தல் நேரத்தில்
சாதனை எடுத்துக்கூற திறந்து வைக்கப்பட்ட ஐடி., பார்க் வேதனையாக
காட்சியளிக்கின்றது. கங்கைகொண்டானில் அமைந்துள்ள ஐடி., பார்க்கில் எந்தவித
அடிப்படை வசதியோ, உள்கட்டமைப்பு வசதியோ இன்றி எலும்பு கூடாக
காட்சியளிக்கிறது. இதற்கு தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர்
ஜெயலலிதா, தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டுள்ள 39 சர்வதேச நிறுவனங்களை
நேரில் அழைத்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். எனவே இத்தகைய
சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான குடிநீர், ரோடு, போக்குவரத்து, மின்சாரம்
போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில்
மேற்கொள்ளப்படும்.தற்போது ரத்தமில்லாதது போல் உள்ள தகவல் தொழில்நுட்ப
பூங்காக்களுக்கு இந்த ஆட்சியில் ரத்தம் பாய்ச்சப்பட்டு, வேலைவாய்ப்பினை
எதிர்நோக்கியிருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்படும். கடந்த ஆட்சியில் இருந்த தொழில் நுட்ப பூங்கா மூலம் நேரடியாக
40 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 80 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு
உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நிறுவனமும்
இங்கு வந்து தொழில் துவங்கவில்லை. மேலும் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு
அளிக்கப்படவில்லை. இத்தகைய குறைபாடுகளை முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு
எடுத்து சென்று குறைபாடுகளை களைய நடவடிக்கை விரைவில்
மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.ஆய்வின் போது
தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு, எல்காட் நிறுவன பொது
மேலாளர் அதுல் ஆனந்த், கலெக்டர் செல்வராஜ், பிஆர்ஓ., இளங்கோ, ஆர்டிஓ.,
ராஜகிருபாகரன், எல்காட் மேலாளர் சந்திரா உடனிருந்தனர்.