/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
/
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2011 12:43 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் சம்பந்தமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரவியம் முன்னிலை வகித்தார் அதிமுக நிர்வாகிகள் சுதா பரமசிவன், பரணி சங்கரலிங்கம் கூறும் போது, ''மாநகராட்சி 6வது வார்டில் 300 ஓட்டுகள் 27வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு போதுமான ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்'' என்றனர். இதில் காங்., சுந்தராஜபெருமாள் கூறும் போது, ''குருந்துடையார்புரம், காமராஜர்புரம் பகுதி வாக்காளர்கள் ஓட்டு போட 6 கி.மீ தூரம் குறிச்சிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, குருந்துடையார்புரத்தில் ஓட்டுச் சாவடி அமைக்க வேண்டும்'' என்றார். இந்திய கம்யூ., சுடலை, ராஜகோபால், ராமலிங்கம் கூறும் போது, ''வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியலை அரசியல் கட்சியினர் கேட்ட பிறகுதான் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலை வழங்கியிருந்தால் பிரச்னைகளை தெரிவிக்க முடியும்'' என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் கூறும் போது, ''மானூர், குத்தாலபேரி, ஐகான்புரம் பகுதிகளில் போதுமான ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதிகளில் அதிக ஓட்டுச் சாவடிகளை அமைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு போதுமான விண்ணப்பங்களை வழங்க வேண்டும்' என்றார். மாவட்டத்தில் வரைவு ஓட்டுச் சாவடிகளின் பட்டியல் அரசியல் கட்சிளின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். வரும் 19ம் தேதிக்கு முன்னர் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டால்தான் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த முடியும் என்று அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், உதவியாளர் திராவிட மணி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள், பி.டி.ஓக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக சார்பில் மூர்த்தி, ராமசுப்பிரமணியன், சண்முகசுந்தரம், காங்., சிந்தா சுப்பிரமணியன், பா.ஜ அன்புராஜ், பாலசுப்பிரமணியன், முருகதாஸ், சுரேஷ், காங்., கொடிக்குறிச்சி முத்தையா, சொர்ணம், சமக தங்கராஜ், தேசியவாத காங்., முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.