ADDED : ஜூலை 14, 2011 10:49 PM
திருத்தணி : முருகன் கோவிலில், அருணகிரிநாதரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை கோஷ்டியினர் சொற்பொழிவு நேற்று நடந்தது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், ம.பொ.சி சாலையில் உள்ள சுந்தர வினாயகர் கோவிலில் இருந்து, அவரது திருஉருவப்படத்தை பஜனை கோஷ்டியினர் சரவண பொய்கை (திருக்குளம்) மலைப் படிகளின் வழியாக மலைக் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் மலைக் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் திருஉருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வளர்புரம், மின்னல், நரசிங்கபுரம், சத்திரவாடா, மத்தூர், அத்திமாஞ்சேரிபேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினர் தேவாரம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. விழாவில் கோவில் இணை ஆணையர் கவிதா, பி.ஆர்.ஓ., மோகன், பேஷ்கர் சுப்பிரமணி உள்பட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

