ADDED : ஜூலை 06, 2024 01:48 AM
மீஞ்சூர:மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல், சம்பந்தம் நகரைச் சேர்ந்தவர் குமார், 59. கடந்த, 3ம் தேதி இரவு, வீட்டின் மாடியில் உறங்கினார். கீழ்தளத்தில் மகள் மோனிகா மற்றும் பேத்தியும் உறங்கினர்.
காற்று வசதிக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கி உள்ளனர். அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக குமார் கண் விழித்து பார்த்தபோது, அருகில் வைத்திருந்த மொபைல் போன் மாயமாகி இருந்தது.
கீழே வந்து மகளிடம் தெரிவித்தபோது, மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி செயின், பேத்தியின் கழுத்தில் இருந்த 1 சவரன் செயின், வீட்டில் இருந்த, 10,000 ரூபாய் திருடு போயிருப்பதை அறிந்தார். மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
நள்ளிரவில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அசந்து துாங்கிய நேரத்தில் மர்ம நபர்கள், திருடிச் சென்றது தெரிந்தது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.