/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
5,000 ஓட்டுகள் விடுபட்டன கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
5,000 ஓட்டுகள் விடுபட்டன கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 19, 2024 10:49 PM
மணலி:மணலியில், நான்கு வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் விடுப்பட்டதால், வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாமல் தவிப்பிற்கு ஆளாக நேர்ந்ததாக, அ.தி.மு.க., 21வது வார்டு கவுன்சிலர் ராஜேஷ் சேகர் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ''திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் உள்ளடங்கிய, மணலி மண்டலத்தின், 18, 20, 21, 22 ஆகிய வார்டுகளில், 5,000 ஓட்டுகள் வரை விடுபட்டுள்ளது.
பலரும், காலை முதலே வந்து, ஓட்டளிக்க முடியாமல் கடும் விரக்தியில் வீடு திரும்பி செல்கின்றனர்,'' என்றார்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வடசென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்டோர், அதிகாரிகளிடம் ஓட்டுகள் விடுப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள், தீர்வு காண்பதாக கூறிய நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு ஓட்டளிக்க அனுமதிக்கப்படவில்லை.
திருவொற்றியூர் தொகுதி முழுவதும், கடந்த முறை, 3.10 லட்சம் ஓட்டுகள் இருந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கு, 2.74 லட்சம் ஓட்டுகள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர்.
இவையனைத்தும், அ.தி.மு.க.,விற்கு சாதகமான ஓட்டுகள். வேண்டுமென்றே அதிகாரிகள், தி.மு.க., வினருடன் சேர்ந்து, 36,000 ஓட்டுகளை பதிவு செய்ய முடியாதபடி நீக்கியுள்ளனர் என, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர்.

