/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; தலை துண்டிக்கப்பட்டு தொழிலாளி பலி
/
ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; தலை துண்டிக்கப்பட்டு தொழிலாளி பலி
ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; தலை துண்டிக்கப்பட்டு தொழிலாளி பலி
ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; தலை துண்டிக்கப்பட்டு தொழிலாளி பலி
UPDATED : ஆக 22, 2024 04:48 AM
ADDED : ஆக 22, 2024 02:19 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஆவின் பால் பண்ணை தொழிற்சாலையில், பால் பாக்கெட் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளியின் தலைமுடி மற்றும் துப்பட்டா, மோட்டாரில் சிக்கியதில், தலை துண்டிக்கப்பட்டு பலியானார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை தொழிற்சாலை உள்ளது. இந்த பண்ணையில் இருந்து, தினமும் 90,000 லிட்டர் பால், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு, சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி உமாராணி, 30, என்பவர், மூன்று மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இப்பகுதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கணவர், இரு மகன்கள், ஒரு மகளுடன் தங்கியிருந்தார்.
பால் பண்ணையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, பால் உற்பத்தி செய்யும் பணி நடந்து வந்தது. இப்பிரிவில், பால் பாக்கெட் உற்பத்தியாகி வெளியே வரும்போது, அவற்றை, 'டப்'பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டாவும், தலைமுடியும், 'கன்வேயர் பெல்ட்' அருகே இருந்த மோட்டாரில் சிக்கியதில், நொடிப் பொழுதில் தலை துண்டிக்கப்பட்டு அவர் பலியானார். மிஷினில் தலை மாட்டிக் கொண்டது; தலை இல்லாத உடல் பகுதி, தரையில் கிடந்தது.
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல், உமாராணியை பணியில் ஈடுபடுத்தியதாலேயே, அவர் இறக்க நேர்ந்தது என, சக பணியாளர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த திருவள்ளூர் டி.எஸ்.பி., கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உமாராணியின் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் காரணமாக காக்களூர் பால் பண்ணையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உற்பத்தி பாதிக்கப்பட்டது.