/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆடி அமாவாசை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
/
ஆடி அமாவாசை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
UPDATED : ஆக 05, 2024 02:28 AM
ADDED : ஆக 05, 2024 02:26 AM

திருத்தணி அடுத்த மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத அமாவாசையையொட்டி மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிேஷகம் நடந்தது.
பின் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
இதேபோல், திருத்தணி நகரத்தில் தணிகாசலம்மன், படவேட்டம்மன், தணிகை மீனாட்சி அம்மன், வனதுர்க்கையம்மன் காந்தி நகர் துர்க்கையம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மன், உற்சவ மூர்த்தி, உள்புறப்பாடு சென்று, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் எல்லைஅம்மனை தரிசித்தனர்.
தர்ப்பணம்
திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.
ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவில் தெப்பகுளம் முன், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, திரளான பக்தர்கள் காலை முதல் மாலை வரை, கோவில் அருகே ஹிருத்தாபநாசினி குளக்கரையில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின், நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து, மூவர் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்தனர்.
சயன கோலத்தில் பவானியம்மன்
பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய பவானியம்மன் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
கடந்த, 17 ம் தேதி துவங்கிய ஆடி மாத விழாவில், முதல் ஞாயிற்றுக்கிழமை கடந்த, 21ம் தேதி நடந்தது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மாலை உற்சவர் அம்மன் சூர்ய பிரபை வாகனத்தில், பவானியம்மன் உமாமகேஸ்வரி அலங்காரத்தில் திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:00 மணிக்கு உற்சவர் அம்மன் குதிரை வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை, 4:00 மணிக்கு நாக வாகனத்தில், உற்சவர் அம்மன் அனந்த சயன கோலத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
- நமது நிருபர் குழு -